கொழும்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் கையொப்பத்துடன், கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி கொழும்பு வலயத்திலுள்ள மாகாண சபைகளுக்கு உட்பட்ட பாடசாலைகளின் அதிபர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலையில் நடைபெறும் விசேட நிகழ்வுகள், திறப்பு விழாக்கள், அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் உள்ளிட்டவற்றிற்கு பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்கள் நிகழ்விற்கு வருகை தந்தன் பின்னர் அரச அதிகாரியென்ற வகையில், அதிபர்கள் அவர்களுக்கு கௌரவமளிப்பது கட்டாயமாக முன்னெடுக்கப்பட வேண்டிய விடயம் என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்துடன், கொழும்பு வலயத்திலுள்ள மாகாண சபை உறுப்பினர்களின் பெயர் விபரங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
நௌபர் பௌசி, ஜயந்த டி சில்வா, மொஹமட் பைராஸ், அநுராத விமலரத்ன, அர்ஷாட் நிசாம்தீன், மொஹமட் பாயிஸ், எஸ்.குகவரதன், கே.டீ. குருசாமி, மொஹமட் அக்ரம், சுசில் கிந்தெல்பிட்டிய, சுனில் வட்டகல, ஹெக்டர் பெத்மகே ஆகியோரின் பெயர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
கொழும்பு வலய அபிவிருத்திக் குழுவின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில், இவர்களின் பெயர்களை கொழும்பு வலயக்கல்விப் பணிப்பாளர் உள்ளடக்கியுள்ளார்.
அரசியல்வாதிகள் கௌரவத்திற்கு உரியவர்களாயின், அவர்களுக்கு அழைப்பு விடுப்பதற்கு எவரும் பின்வாங்கப்போவதில்லை.
எனினும், இவ்வாறு பலவந்தமாக கௌரவம் பெற முயற்சிப்பது வெட்கப்பட வேண்டிய விடயமல்லவா?A
0 comments:
Post a Comment